2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை கோவையில் இன்று தொடங்குகிறார் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை, கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிமுக அறிவித்து விட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டனர்.
செண்டிமெண்டாக ஜெயலலிதாவிற்கு மறு எழுச்சியை கொடுத்த கோவையில் இருந்தே சுற்றுப்பயணத்தை தொடங்க அதிமுக திட்டமிட்டது. அதன்படி இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறார்.
இதற்காக கோவை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து கோவையின் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு வழிபாடு செய்து தனது எழுச்சிப் பயணத்தை தொடங்குகிறார்.
இந்த எழுச்சி பயணத்தை கடந்த 5 ஆண்டுகளில் திமுக தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள சட்ட ஒழுங்கு பாதிப்புகளை முக்கியமாக சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K