Publish Date: Mon, 02 Feb 2026 (15:02 IST)
Updated Date: Mon, 02 Feb 2026 (15:04 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மக்கள் சுற்றுப்பயணத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்..
இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. ஏனெனில் இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்திலும் இப்படி ஒரு சோகமான நிகழ்வு நிகழ்ந்ததில்லை.. இது விஜய் மற்றும் தவெகவுக்கு ஒரு கரும்புள்ளியாகவே அமைந்திருக்கிறது..
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தவெக முறையிட்டு, அது ஏற்கப்பட்டு கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பான விசாரணை நடந்து வந்தது. தவெக முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, பிடி செல்வகுமார், புஸ்ஸி ஆனந்த், மற்றும் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர், விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டி டிரைவர் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள்..
விஜய் இரண்டு முறை நேரில் டெல்லி சென்று சிபிஐ விசாரனையில் கலந்து கொண்டார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்தது . அதற்போது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது..
ஏற்கனவே பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது..