Publish Date: Sat, 20 Dec 2025 (20:19 IST)
Updated Date: Sat, 20 Dec 2025 (20:22 IST)
எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர். எம்ஜிஆரால் எம்எல்ஏ ஆனவர். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலுப்படுத்தியதில் செங்கோட்டையனுக்கு முக்கிய பங்குண்டு.
அரசியலில் 50 ஆண்டு கால அனுபவம் கொண்ட செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக பேச துவங்கியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. தனிக்கட்சி துவங்குவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து டிவிஸ்ட் கொடுத்தார் செங்கோட்டையன்.
தவெகவில் அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், அதிமுகவுக்கு தனது பவரை காட்ட நினைத்த செங்கோட்டையன் ஈரோட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஈரோடு பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தார் என அக்கட்சியின் தலைவர் விஜயும் செங்கோட்டையனை பாராட்டி பேசி இருக்கிறார்.
ஆனால் அந்த மாநாட்டில் நடந்த ஒரு சம்பவம் செங்கோட்டையன் ஆதரவாளர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியிருக்கிறது. மேடையில் விஜய் பேசுவதற்கு முன் செங்கோட்டையனை பேச வைப்பார்கள் என அவரின் ஆதரவாளர்களை எதிர்பார்த்தார்களாம். ஆனால் நிர்மல்குமாருக்கு முன்பு அவரை பேசவைத்தார்கள். அதுவும் மூன்று நிமிடம்தான் பேசினார் செங்கோட்டையன். என்ன இருந்தாலும் அண்ணன் சீனியர்.. பல வருட அரசியல் அனுபவம் கொண்டவர்.. அவரை விஜய் பேசுவதற்கு முன்பு பேச வைத்திருக்க வேண்டும் என வருத்தப்பட்டார்களாம்.