Publish Date: Fri, 26 Dec 2025 (18:16 IST)
Updated Date: Fri, 26 Dec 2025 (18:18 IST)
2 நாட்களுக்கு முன்பு திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது. அப்போது பதவி கிடைக்காதவர்கள் பனையூர் அலுவலத்திற்கு வந்து தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். குறிப்பாக கட்சிக்காக பல வருடங்கள் வேலை செய்த எங்களுக்கு பதவி இல்லையா என்பதே ஒருமித்த கேள்வியாக இருந்தது.
அதில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதாவும் ஒருவர். இவர் பல வருடங்களாக விஜயின் மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். விஜய் தவெக எனும் கட்சியை துவங்கியபோது அதிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கட்சிக்காக பல பணிகளையும் செய்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வந்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியை தனக்கு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால், அம்மாவட்டத்திற்கு வேறொருவர் நியமிக்கப்பட தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்திற்கு வந்து முறையிட்டார். அப்போது விஜய் எண்ட்ரி கொடுக்க அவரின் காரை மறித்து அவரிடம் நியாயம் கேட்கவும் அவர் முயற்சி செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில்தான், இன்று காலை அஜிதா தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியானது. அஜிதாவின் செயல்பாடுகளால் கோபமடைந்த தவெகவினர் சமூகவலைத்தளங்களில் திமுகவின் கைக்கூலி என அவரை கடுமையாக விமர்சித்தார்கள். இதுதான் காரணம் என சொல்லப்பட்டது.
ஒருபக்கம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஜிதா பற்றி கோபமாக பேசினாராம். தலைவரின் காரை மறிக்கும் அளவுக்கு அந்த பெண் நடந்துகொண்டார். அவருக்கு எந்த பதவியும் கிடைக்காது என பேசியதாக சொல்லப்படுகிறது. கட்சியில் இவ்வளவு வருடம் வேலை செய்து பதவியும் இல்லை என ஆகிவிட்டது. அதோடு, திமுகவின் கைக்கூலி என்றும் தன்னை திட்டுவதால்தான் மன உளைச்சலில் அஜிதா தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.