Publish Date: Wed, 22 Apr 2020 (10:13 IST)
Updated Date: Wed, 22 Apr 2020 (10:14 IST)
ஊரடங்கை மதிக்கவிட்டால் சென்னை அடுத்த நியூயார்க்காக மாறிவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து எச்சரிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது...
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன. சென்னை என்ன கொரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ஊரடங்கை மதிக்காவிட்டால் சென்னை இன்னொரு நியூயார்க்காக மாறிவிடும்...
தமிழகத்தின் 23 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் சென்னை தான் முதலிடம். 10 மாவட்டங்களின் மொத்த பாதிப்பை விட அதிகமாக சென்னையில் 303 பேர் பாதிப்பு. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் போல வாகனங்கள் அணிவகுப்பதை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாதா?
சென்னையில் ஊரடங்கை மீறிய போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கை செயல்படுத்தியதில் சபாஷ் வாங்கிய சென்னை காவல்துறைக்கு திடீர் சோர்வு, சுணக்கம் ஏன்? ஒருவேளை ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.