Publish Date: Fri, 01 Mar 2024 (18:43 IST)
Updated Date: Fri, 01 Mar 2024 (18:50 IST)
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக கோவை இரயில் நிலையம் வந்த 3 கம்பெனி துணை இராணுவத்தினரை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பணிகளை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர்.
பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை மாநகர் மற்றும் திருப்பூர், நீலகிரியில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.