தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் அருகே நகைகள், லேப்டாப் உள்பட பல கொள்ளைகளை நடத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொள்ளையன் இருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனே, அந்த இடத்திற்கு சென்ற போலீசார் கொள்ளையனை சுற்றிவளைத்தனர். அப்போது, கொள்ளையன் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை ஆய்வாளர் அம்பேத்கர், கொள்ளையனை அடக்குவதற்காக அவரது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். காயமடைந்த ஸ்டீபன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஸ்டீபனுக்கு எதிராக 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகள் இனிமேல் தீவிரமாக விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.