பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசினார்.
விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் விரிவுபடுத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தையே தமது கருத்தாக தெரிவித்தார்.
"தி.மு.க.வைத் தோற்கடிப்பதே எங்களுடைய நோக்கம். கூட்டணியை விரிவுபடுத்துவது என்பது பலவீனத்தின் அறிகுறி அல்ல; தி.மு.க.வை வீழ்த்த அனைத்து தரப்பினரின் பங்கும் அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாஜக ஆதரவளிக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துவிட்டதாகவும் தமிழிசை குறிப்பிட்டார். வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விரிவடையும் என்ற நம்பிக்கையை அவர் திட்டவட்டமாக மீண்டும் ஒருமுறை தெரிவித்தார்.