தமிழ்நாட்டிற்கு பணி நிமித்தம் தற்காலிகமாக வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாது என்றும், 2026 தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போய்விடும் என்றும் அமைச்சர் எஸ். ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வேலைக்காக வந்து தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு இங்குள்ள அரசியல் சூழல் குறித்து தெரியாது. அவர்கள் நிரந்தர குடிமக்களாகக் கருதப்பட முடியாது. பல ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கே இன்னும் வாக்களிக்கும் உரிமை இல்லை" என்று குறிப்பிட்டார்.
மேலும், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் நிரந்தரமாக இல்லாமல், வெவ்வேறு நகரங்களுக்கு மாறி வேலை செய்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக காணாமல் போய்விடும்; முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.