Publish Date: Mon, 05 Feb 2018 (18:58 IST)
Updated Date: Mon, 05 Feb 2018 (19:01 IST)
டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் வெகுவாக பாராட்டியுள்ளார்.
பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் பாஜக, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் தினகரனை புகழ்வதையும் அவர் தவறவிடவில்லை. தினகரனை தனிமைப்படுத்த சிலர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
தினகரனை யாரேனும் தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் அந்த கனவு ஒரு நாளும் நிறைவேறாது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல் எதிரி, முக்கிய எதிரி, மூல எதிரி என 3 எதிரிகளையும் வீழ்த்தி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை தினகரன் பெற்றிருக்கிறார்
அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களது அறியாமையை என்ன சொல்வது என்று புரியவில்லை. டிடிவி தினகரன் தவிர்க்க முடியாத தலைவன். தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய தீப கம்பம். அதனை வெட்டி விரகாக்கலாம் என்று யார் நினைத்தாலும் அந்த முயற்சி ஒருக்காலும் பலிக்காது என நாஞ்சில் சம்பத் புகழாரம் வாசித்துள்ளார்.