Publish Date: Mon, 05 Feb 2018 (15:40 IST)
Updated Date: Mon, 05 Feb 2018 (15:43 IST)
தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பாக மீத்தேன் எடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர் போராட்டங்களையும் நடத்தினர். எனவே, அந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி சார்பில் எந்த புதிய திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை எனக் கூறிய அவர், மாநில அரசு மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற்ற பின்னரே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.