Publish Date: Mon, 05 Feb 2018 (17:12 IST)
Updated Date: Mon, 05 Feb 2018 (17:13 IST)
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அம்மன் சாமிக்கு பூசாரி ஒருவர் சுடிதார் அலங்காரம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சிலை உள்ளது. அந்த அம்மனுக்கு தினமும் ஆறு காலை பூஜை செய்யப்பட்டு வருகிறது.
பட்டுப்புடவை அணியவைத்து அந்த அம்மனுக்கு அந்த கோவிலின் குருக்கள் ராஜ் மற்றும் கல்யாண் ஆகியோர் தினமும் அலங்காரம் செய்வது வழக்கம். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக திடீரெனெ நேற்று அம்மனுக்கு சுடிதார் அலங்கராம் செய்யப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை செல்போனில் எடுத்த ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை தெரிவித்தனர்.
இதுபற்றி குருக்கள் அளித்த விளக்கத்தில், எங்கள் கனவில் அம்மன் வந்து சுடிதார் அலங்காரம் செய்ய சொன்னாள் என்று கூற, விளக்கத்தை ஏற்க மறுத்த திருவாவடுதுறை ஆதினம் இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.