Publish Date: Mon, 29 Jun 2020 (14:11 IST)
Updated Date: Mon, 29 Jun 2020 (14:13 IST)
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த குடும்பத்தினரை பார்க்க செல்ல உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் அனுமதி பெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்திய பென்னிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் மரணித்ததாக பலர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேற்று நேரில் சென்று சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல உதயநிதி அனுமதி பெற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “உதயநிதி இ-பாஸ் அனுமதி பெறாமல் தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாய பிரச்சினை என்பதால் உதயநிதி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.