Publish Date: Mon, 29 Jun 2020 (08:27 IST)
Updated Date: Mon, 29 Jun 2020 (08:29 IST)
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இறந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த பரபரப்பே அடங்காத சூழலில் தென்காசியில் அதுபோல மற்றொரு சம்பவம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்காசியை அடுத்த வீரக்கேரளம்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும், இவரது உறவினர் ஒருவருக்கும் இட தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் குமரேசனை அழைத்து சென்று விசாரித்து திருப்பி அனுப்பிய நிலையில், வீட்டிற்கு வந்த குமரேசன் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குமரேசன் இறப்புக்கு போலீஸார் அவரை தாக்கியதே காரணம் என குமரேசன் தந்தை நவநீத கிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். மேலும் போலீஸார் தாக்கியதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.