தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில், திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக ஆதார் உள்ளிட்ட தனிநபர் விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் வாக்காளர் விவரங்களை கேட்கக்கூடாது என்று தெரிவித்தார். மேலும், டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின் போது, "ஓடிபி விவரங்களை கேட்க வேண்டாம் என்று போலீஸ் கூறியும் எதற்காக கேட்கிறார்கள்? ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த தகவல்ஏன் இல்லை" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதன் அடிப்படையில், மொபைல் போனில் ஓடிபி பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.