தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இன்று காலை நடைப்பயிற்சியின் போது அவருக்கு திடீரென லேசான உடல்நலக் குறைவு மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து, அவர் உடனடியாகக் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "காலையில் நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சில மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.