Publish Date: Tue, 04 Jun 2019 (15:39 IST)
Updated Date: Tue, 04 Jun 2019 (15:42 IST)
தமிழகம் முழுவதும் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும் மீண்டும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பை செய்யப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதாக சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள .#stop_Hindi_imposition எனும் அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட்டும் ஆக்கப்பட்டது.
இது மாதிரியான பலத்த எதிர்ப்புகளால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன் படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது எனவும் இந்தியும் ஒரு தேர்வு மொழியாகத்தான் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதன் படி அந்தந்த மாநிலம் விரும்பும் மொழிகளை மூன்றாவது மொழியாக தேர்வு செய்துகொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் மும்மொழிக் கொள்கையே மறைமுகமான இந்தி திணிப்புதான் அதனால் இருமொழிக் கொள்கையேப் போதுமானது எனக் கருத்தும் நிலவி வருகிறது.
இதுகுறித்து இன்று சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது’ ஆங்கிலம் மட்டுமே இதுவரை இந்தியாவின் தொடர்பு மொழியாக உள்ளது. இந்தியை தொடர்புமொழியாக்கிக் கொள்ளும் வாய்ப்பு முன்பு வழங்கப்படவில்லை. இப்போது இந்தி திணிக்கப்படாமல் விருப்பத்தின் பேரில் ஏழை, எளிய மாணவர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். ’ எனத் தெரிவித்துள்ளார்.