Publish Date: Fri, 04 Oct 2019 (10:32 IST)
Updated Date: Fri, 04 Oct 2019 (10:37 IST)
மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன் “ஹிந்தி மொழி டயபருடன் இருக்கும் ஒரு குழந்தை என கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கமல்ஹாசன், அக்கட்சியின் சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒவ்வொரு பெட்டகங்களிலும் 96 சானிட்டரி நாப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் என ஒரு ஆண்டுக்கான பொருட்கள் இருந்தன.
அதன் பின்பு அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இந்தி மொழி டயாபருடம் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிரதம், தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இளைய மொழிதான்.” என கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ஹிந்தியை தான் ஏளனமாக கூறவில்லை எனவும், அதை திணிக்க கூடாது எனவும் தான் கூறுவதாக தெரிவித்தார். முன்னதாக ஹிந்தி மொழி தான் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி என அமித் ஷா கூறிய கருத்துக்கு எந்த ஷாவும் இந்தியாவின் பன்மைத்துவத்தை மாற்ற முடியாது என கூறினார். தொடர்ந்து இது போல் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக கமல்ஹாசன் கருத்து கூறிவருவது அவரது அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வை தெளிவுபடுத்துவதாக பலர் கூறிவருகின்றனர்.