அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலியாக திருப்பூரில் வேலையிழப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு இருந்து வருகிறது. முக்கியமாக அமெரிக்காவிற்கு ஆயத்த ஆடைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரிவிதிப்பால், அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் திருப்பூர் ஏற்றுமதியை தவிர்த்துள்ளனர். இதனால் ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் ஆர்டர்களும் குறைந்து விட்டதால் ஆயத்த ஆடை ஆலைகளில் ஆட்குறைப்பு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக திருப்பூர் ஆடை ஆலைகளில் பெரும்பாலான பீகார் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது பலரும் வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆடைகள் ஏற்றுமதியில் களைக்கட்டும் திருப்பூர் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. விரைவில் இந்த வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்கும் என தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.
Edit by Prasanth.K