தமிழக அரசு கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தகுதி உள்ள மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் நிலையில், இந்த பணத்தை தங்களால் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை என்றும், குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததால் வங்கிகளால் அபராதம் பிடிக்கப்படுவதாகவும் பல பயனாளிகள் புலம்பி வருகின்றனர்.
குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க இயலாத காரணத்தினால், வங்கி நிர்வாகம் 300 முதல் 350 ரூபாய் வரை அபராதமாக எடுத்துக் கொள்கின்றனர் என்றும், இதனால் ஆயிரம் ரூபாய் பெற்றும், தங்கள் கைகளுக்கு 650 ரூபாய் தான் வருகிறது என்றும் அவர்கள் குறித்துள்ளனர்.
மேலும், மகளிர் உரிமை தொகையை பூஜ்ஜியம் வங்கி இருப்பு கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றால், அதற்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வங்கி கணக்கை மாற்ற முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
சமூக நலத்துறை அதிகாரிகள், “திட்டம் மட்டும் தான் எங்களுடையது; செயல்பாடு வருவாய் துறையினரது. எனவே, நீங்கள் அங்கு சென்று கேளுங்கள்” என்று கூறி வருவதாகவும், இதனால் பூஜ்ஜியம் இருப்பு தொகை உள்ள வங்கி கணக்கிற்கு இந்த திட்டத்தை மாற்ற முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அமைச்சர் கீதா ஜீவன், இந்த பிரச்சினைகளில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.