Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேச்சுவார்த்தையில் உடன்பாடு..! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!!

Teacher

Senthil Velan

, வெள்ளி, 8 மார்ச் 2024 (15:04 IST)
தமிழ்நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 19 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள்,  தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
 
தொடக்கக் கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2009ஆம் ஆண்டு மே 31 வரை வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 ஆகவும் அதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.5200 ஆகவும் உள்ளது.  ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைக்கப்பட்டது. 
 
இதனால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அரசாணை எண்‌ 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 19ஆம் தேதி  முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை டிபிஐ வளாகத்தில் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 5 நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 

 
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 19 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு, மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் இருந்து கழன்று விழுந்த விமான டயர்!