Publish Date: Wed, 14 Feb 2024 (14:46 IST)
Updated Date: Wed, 14 Feb 2024 (14:54 IST)
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் அறிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பிற்குப் பின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக பிப்ரவரி 15ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும், அதன்பின்னரும் அரசு செவிசாய்க்காவிட்டால் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நேற்று தமிழக அரசு சார்பில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், எனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ ஊழியர் அமைப்பினர் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர், ஜாக்டோ- ஜியோ அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.