பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் அதுகுறித்து வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனரான ராமதாஸுக்கு, அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்குமான மோதலால் பாமக பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது. முன்னதாக பாண்டிச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் மேடையில் வைத்து அன்புமணியை ராமதாஸ் மறைமுகமாக கண்டித்ததும், அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கட்சி பிரமுகர்கள் இருவரிடையே பேசி சமாதானம் செய்து வைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த பாமக மாநாட்டிலும் இருவரிடையே முட்டிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அன்புமணி, நான் என்ன தவறு செய்தேன் என கேட்டு பேசியிருந்த நிலையில், அன்புமணியை வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசியுள்ளார் ராமதாஸ்.
அதில் அவர் “நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசைதிருப்பும் செயலாகும். உண்மையில் தவறு செய்தது அன்புமணியல்ல. நான் தான். எனது சத்தியத்தை மீறி 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன்.
தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடியது அன்புமணிதான். புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரிகம் இல்லாமல் நடந்துக் கொண்டது யார்?” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
பாமகவில் பெரியவர் - சின்னவர் இடையே எழுந்துள்ள இந்த முரண்பாடுகளால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக இரு அணிகளாக பிரிந்து விடுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K