தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியின் சார்பில் கமல்ஹாசன், ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மாநிலங்களவை ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்புமணி ராமதாஸ், சண்முகம், முகமது அப்துல்லா, வில்சன், என். சந்திரசேகரன் மற்றும் வைகோ ஆகியோர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனை முன்னிட்டு, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 9ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற வாய்ப்பு இருந்தால், ஜூன் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் வில்சன், மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால், அது நடைமுறையாகும் என்றும் கூறப்படுகிறது.
அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக கொடுக்குமா என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.