Publish Date: Thu, 30 Apr 2026 (14:58 IST)
Updated Date: Thu, 30 Apr 2026 (15:00 IST)
தமிழகத்தில் இன்று முதல் மே 2-ஆம் தேதி வரை நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்று திசை மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் 30-ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மே 1 மற்றும் மே 2 ஆகிய இரு நாட்களில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. மழையினால் ஒருபுறம் குளிர்ச்சி நிலவினாலும், தமிழகத்தின் சில இடங்களில் மே 4 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.