Publish Date: Wed, 06 Jul 2022 (08:27 IST)
Updated Date: Wed, 06 Jul 2022 (08:29 IST)
10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர இலவச சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றோர் அடுத்த கட்டமாக மேற்படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் “2021-22ம் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடைபெற உள்ளது. இந்த துணை தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடைவதற்காக அந்தந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.