அ.தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது இன்னொரு முன்னாள் எம்பியான மைத்ரேயன், தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இன்று இணைந்தார்.
மூன்று முறை அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ள மைத்ரேயன், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்தார். ஆனால், அ.தி.மு.க. தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இது, அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அ.தி.மு.க.வில் இணைவதற்கு முன், மைத்ரேயன் 1995 முதல் 1997 வரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.