நேற்று சென்னையின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் சில மணி நேரத்திற்குள் பேய் மழை பெய்து தீர்த்த நிலையில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக சுயாதீன ஆய்வாளர் ப்ரதீப் ஜான் கூறியுள்ளார்.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென அடை மழை பெய்தது. சில மணி நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது சென்னைவாசிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சுயாதீன வானிலை ஆய்வாளர் வெதர்மேன் ப்ரதீப் ஜான் “இந்த ஆண்டில் சென்னையில் முதல் மேகவெடிப்பு. சென்னையில் பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது” என கூறியுள்ளார்.
அதுபோல மற்றொரு வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் “சென்ன்னையில் இரவு 10-11 மணியளவில் மேகவெடிப்பு போன்ற மழை பெய்துள்ளது. இன்று இரவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது. ஆனால் நேற்றைய மழையை விட தீவிரம் குறைவாக இருக்கும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K