Publish Date: Wed, 18 Jul 2018 (16:36 IST)
Updated Date: Wed, 18 Jul 2018 (16:43 IST)
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரிடம் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டு மற்றும் தனது சம்பந்தியிடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணை ஆகியவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் தமிழக அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. முதல்வர் சம்பந்தியிடம் விசாரணை நடத்தப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் வழியாக முதல்வர் எடப்பாடி தெரிவித்தாலும் அதில் உண்மையில்லை என பலரும் கூறுகின்றனர். தங்களை மிரட்டிப் பார்க்கவே இந்த அதிரடி சோதனையை மத்திய அரசு செய்துள்ளது என பழனிச்சாமி கருதுகிறாராம்.
சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா ‘தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக இருக்கிறது’ எனப் பேசினார். இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற கோவை செல்வராஜ் “பாஜக எந்த ஊழலும் செய்யவே இல்லையா?” எனக் கேட்டிருந்தார்.
இது பாஜக மேலிடத்திற்கு சொல்லப்படவே செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்து கோபமடைந்த எடப்பாடி இதுக்கு மேல் பொறுக்க முடியாது. நம்மை மிரட்டிப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்துள்ளனர் என டெல்லியில் இருந்த துணை சபாநாயர் தம்பிதுரையிடம் கூறினாராம்.
அதைத் தொடர்ந்தே, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த தம்பிதுரை “எங்களுக்கு யாரை பார்த்தும் பயம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு பலிக்காது. இது திராவிட மண்” என அதிரடியாக பேட்டி கொடுத்தார். இது பாஜக மேலிடத்திற்கு கோபத்தை கிளப்ப, எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி சுப்பிரமணியை நேற்று பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இதுகேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர், இது தொடர்பாக அடுத்து சென்ன செய்வது என்கிற ஆலோசனையில் மூழ்கியுள்ளார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதேபோல், இன்னும் சில அமைச்சர்களின் பெயரும் அமித்ஷாவின் லிஸ்டில் இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.