Publish Date: Wed, 18 Jul 2018 (07:45 IST)
Updated Date: Wed, 18 Jul 2018 (08:04 IST)
தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசிற்கு ஒப்பந்த அடிப்படையில் பருப்பு, முட்டை ஆகியவற்றை விநியோகித்து வந்த கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அதே போல் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிற எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும், அந்த நிறுவனத்தின் ஓனர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீப காலமாக ஆளுங்கட்சி தங்களது பேச்சை கேட்க மறுத்து வருவதால் தான், பாஜக இப்படி போன்ற வருமான வரித்துறை சோதனை என்ற நாடகங்களை நடத்தி, ஆளும் கட்சியினரை தங்கள் வழிக்கு கொண்டு வரப்பார்க்கிறது என பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நடந்து வரும் ரெய்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித்ஷா தமிழகத்தில் அதிக ஊழல் உள்ளது என்று கூறியிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தவிர தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையிலே அவர்கள் சோதனைகள் மேற்கொள்கிறார்கள் என்றார் தமிழிசை.