Publish Date: Mon, 16 Jul 2018 (19:40 IST)
Updated Date: Mon, 16 Jul 2018 (19:42 IST)
தமிழகத்தில் ஐடி ரெய்டுகள் தொடர்வதன் மூலம் தமிழக அரசின் ஊழல்கள் அம்பலமாகி வருகிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சத்துணவு ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனம் மோசடி செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஸ்டாலின் டிவிட்டரில் பின்வருமாறு தெரிவித்துள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அதிமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் ரெய்டு, அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி.
தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு, வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது.
கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய ரெய்டு வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.