இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' தொடர்பாக பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பழைய முகவரியிலிருந்து மாறி இருப்பவர்களின் வாக்குரிமை, அவர்கள் தற்போது வசிக்கும் முகவரிக்குத்தான் அமையும் என்றும், அவர்களின் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இருந்ததா என்பது மட்டுமே சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, ஆதாரங்களை கணக்கெடுப்பின்போது சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், வரைவு பட்டியல் வெளியான பின் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பப் படிவத்தில் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரைப்பதிவு செய்தால் மட்டுமே போதுமானது.
2024 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம்-6 மற்றும் உறுதிமொழிப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்களின் படிவங்களை அவர்களின் குடும்பத்தார் பூர்த்தி செய்து தரலாம் என்றும், விரைவில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.