Publish Date: Fri, 03 Jan 2025 (14:05 IST)
Updated Date: Fri, 03 Jan 2025 (14:07 IST)
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை," என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன், அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, "எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்று எனக்கு தெரியாது. வீட்டில் யாரும் இல்லை, வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் உள்ளனர். இதனால் எனக்கு சரியாக விவரம் சொல்ல தெரியவில்லை. அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சோதனை தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியுமோ, அதே அளவு தான் எனக்கும் தெரியும்," என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.