தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, தி.மு.க. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் இருவரும் மேடையில் ஒருவரையொருவர் கடும் சொற்களால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது.
ஆண்டிப்பட்டிக்கு அருகிலுள்ள சக்கம்பட்டி பகுதியில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், தங்க தமிழ்ச்செல்வனும், மகாராஜனும் கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் "முட்டாப் பயலே", ராஸ்கல் என உரிமையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக தி.மு.க. நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், "தங்க தமிழ்ச்செல்வனை அவமரியாதையாக பேசிய எம்.எல்.ஏ. மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும், "கட்சியினரை மதிக்காத அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஜன் தரப்பினரும் இதற்கு பதிலடியாக, தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராகப்போஸ்டர் அடிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தேனி பகுதியில் உள்ள தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்து, மோதல் மேலும் தீவிரமாகுமா என்பது தெரியவரும்.