இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்து திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.
தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் அவசர அவசரமாக இந்த திருத்தத்தை மேற்கொள்வது, "உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம்" என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
நேர்மையான திருத்தம் நடைபெற, போதுமான கால அவகாசமும், பதற்றமில்லாத சூழலும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பீகாரில் நடந்ததை போல, தமிழ்நாட்டிலும் இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் விதமாக அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்றார்.
இந்த கூட்டத்தில் வரைவு தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் தவெக உட்பட 20 கட்சிகள் இந்த கூட்டத்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.