சென்னையின் முக்கியமான பேருந்து நிலையமான பிராட்வே 10 மாடிக் கட்டடமாக புதுப்பிக்கப்படும் திட்டத்தால், தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்றப்பட உள்ளது.
822 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த புதிய கட்டடத்தில் எட்டு மேலடுக்குகளில் அமைய உள்ளன. இதில் 2 மாடிகள் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கும், வாகன பார்கிங் வசதிக்கும், மீதமுள்ள ஆறு மாடிகள் வணிகநிலைகளுக்காக ஒதுக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தினை சென்னை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டு, மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது 840 பேருந்துகள் 162 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய கட்டட வேலைகள் தொடங்கவுள்ளதால், தற்காலிக பஸ் நிலையம் ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே அமைக்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் நிர்வகிக்கும் 4 ஏக்கர் இடத்தில், ₹7.5 கோடியில் நிர்மாணமாகும் இந்த நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகள் நிறுத்த முடியும். பயணிகள் வசதிக்காக டிக்கெட் கவுன்டர், கழிப்பறைகள், பாலூட்டும் அறை, ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு தயார் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.