அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்று முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இனி தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு மாறாக, அண்ணாமலை சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், "கூட்டணி அரசு அல்ல, பா.ஜ.க. அரசுதான் அமையும்" என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இது குறித்து பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேற அண்ணாமலைதான் காரணம். அதுபோன்ற நிலை மீண்டும் வரக்கூடாது. எனவே, இந்தக் கூட்டணி குறித்துப் பொதுவெளியில் அண்ணாமலை கருத்து எதுவும் கூறக்கூடாது," என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் தமிழிசை, அண்ணாமலையிடம் இதை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து அமித்ஷா சொன்னதுதான் அதிகாரப்பூர்வமான கருத்து என்றும், நயினார் நாகேந்திரன் சொல்வதுதான் கட்சியின் கருத்து என்றும், அண்ணாமலை சொல்வது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.