இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானில் சிக்கி தவிக்கும் சுமார் 10,000 இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்பான வழித்தடத்தை வழங்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு ஈரான் பதிலளித்துள்ளது. தனது வான்வெளி மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நில எல்லைகள் வழியாக வெளியேறலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியா இதற்கான வெளியேற்ற நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது.
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றிரவு தெஹ்ரான் பல்கலைக்கழக விடுதி அருகே நடந்த தாக்குதலில் காஷ்மீரை சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் காயமடைந்தனர். இருவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
"மூன்று நாட்களாகத் தூங்கவில்லை, ஒவ்வொரு இரவும் குண்டுவெடிப்புகள் கேட்கின்றன" என்று சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், இந்த மாணவர்களை விரைவில் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈரானிய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்று வரும் நிலையில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.