கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த சோகத்திலிருந்து குடும்பங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர் குல்தீப் பட், இந்த துயரத்தை சமூக வலைத்தளங்களில் சிலர் இலாபத்திற்காக பயன்படுத்துவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விபத்தில் தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உயிரிழந்த கோமி வியாஸ் குடும்பத்தின் சார்பாக பேசிய பட், சமூக வலைதள பிரபலங்கள், தவறான தகவல்கள், எடிட்டிங் செய்த புகைப்படங்கள், போலியான வீடியோக்கள் மூலம் 'லைக்' மற்றும் வியூஸ் பெறுவதை கடுமையாக விமர்சனம் செய்தார்.
"எங்கள் குடும்பமும், 270 பேரின் குடும்பங்களும் பெரும் மன உளைச்சலில் இருக்கிறோம். ஆனால் சமூக வலைதள பிரபலங்கள், தங்கள் புகழுக்காக, விபத்து வீடியோக்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். கோமி விமானத்தில் இருந்து கிளம்பும்போது எடுத்த செல்ஃபி, AI மூலம் போலி வீடியோவாக மாற்றப்பட்டு வைரலாகிறது. இது எங்களுக்கு மன உளைச்சலை தருகிறது," என்று அவர் வேதனையுடன் கூறினார்.
மேலும், கோமியின் மகள் மிரையாவின் உடல் எரிந்துவிட்டது என்று போலியான தகவல்கள் பரப்பப்படுவதையும், இறுதிச் சடங்கு நடப்பது போன்ற போலி வீடியோக்கள் வலம் வருவதையும் பட் குறிப்பிட்டுள்ளார். கோமியின் பெயரில் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அவரது புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"உங்கள் 'லைக்' மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிக்க ஏன் எங்களுக்கு இவ்வளவு மன உளைச்சலை கொடுக்கிறீர்கள்? தயவுசெய்து இதை நிறுத்துங்கள்!" என்று கண்ணீருடன் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.