ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் AI ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த AI ஆசிரியை மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அசத்தலாக பதில்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக "மார்க் ரேட்" என்ற AI ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த AI ஆசிரியை, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போலவே பாடம் நடத்தும் என்றும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான பதிலை அளிக்கும் என்றும் இந்த பள்ளியின் முதல்வர் ஷாலினி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிப்பதற்காக இயங்கும் ரோபாட்டிக் AI ஆசிரியை சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் சில கேள்விகளை AI ஆசிரியையிடம் கேட்க, அதற்கு மிகச் சரியான பதிலை அந்த AI ஆசிரியை கூறியதை பார்த்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதே ரீதியில் சென்றால், ஆசிரியர்களுக்கு மாற்றாக AI இடம் பிடித்துவிடும் என்றும், ஆசிரியர்களுக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் கூறப்படுவது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.