2026ஆம் ஆண்டு தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தலில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி களமிறங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, அதிமுகவிற்குள் மறைமுக அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக சிறுபான்மை அணியின் நகரச் செயலாளராக இருந்த கே.எஸ். முகமது கனி, தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதை கடுமையாக எதிர்த்து, அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கட்சியின் முன்னணி தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை நேர்மையான வழிகாட்டிகளாக நினைக்கும் தனக்கே, தற்போதைய கூட்டணி ஏற்க முடியாதது எனக் கூறி, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதைத் தெளிவாக எழுதியுள்ளார்.
அத்துடன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவியிலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.