8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!
, ஞாயிறு, 29 ஜூன் 2025 (07:09 IST)
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி சீட்டு பெற்று கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாகவும், அவர்களை எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து ஒரு படகையும் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் கைதான எட்டு பேரையும் ஒப்படைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கைது நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்