கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்ட கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை இரவு நிகழ்ந்த இக்கொடூத் தாக்குதல் தொடர்பாக, இரு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கொல்கத்தா மேயர் ஃபிர்காட் ஹக்கீம் இந்த சம்பவம் குறித்து தனக்கு முழு விவரம் தெரியாது என்றும், காவல்துறை அறிக்கைக்கு பிறகு ஊடகங்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். ஆனால், இந்த சம்பவத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக சாடியுள்ளனர்.
பா.ஜ.க.வின் அமித் மால்வியா மற்றும் பிரதீப் பண்டாரி ஆகியோர் முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். வங்காளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இத்தகைய குற்றங்கள் தொடர்வதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் இருப்பிடம் வெளியிடப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பி, இது மூடிமறைக்கும் முயற்சி என கண்டித்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை பதிலும் அளிக்கவில்லை.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 10 மாதங்களுக்கு முன் நடந்த பாலியல் பலாத்கார கொலை வழக்கின் கொடூரம் இன்னும் மறையாத நிலையில், இந்த சம்பவம் மீண்டும் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.