சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தபோது, மூன்று சகோதரர்கள் அவரை வீடியோ எடுத்ததாகவும், இதை தட்டிக் கேட்ட பெண்ணின் குடும்பத்தினரை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காவல் நிலையத்திற்கு செல்லும்போது எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், கம்பீரமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஷேக் ஜாபர் என்பவர், தனது சகோதரர்களான ரேஹான் மற்றும் கலாம் ஆகியோருடன் சேர்ந்து, ஒரு பெண் குளித்து கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக அவரை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் சென்று மூவரையும் தட்டிக்கேட்டபோது, வீடியோ எடுத்த மூவரும் அந்த குடும்பத்தினர் மீது கத்தி மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஜாபர் மற்றும் கலாம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், ரேஹான் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இந்து மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறை உறுதி அளித்ததையடுத்து போராட்டக்காரர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர். மேலும், தப்பி ஓடிய ரேஹானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் மற்றும் கலாம் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர்கள் இருவரும் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், கம்பீரமாக, ஏதோ ஒரு சாதனையை செய்ததுபோல் நடந்து சென்ற வீடியோ காட்சி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.