உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்ட மருத்துவமனையில் 26 வயதான சர்பராஸ் அகமது என்ற இளைஞர், டயாலிசிஸ் சிகிச்சையின்போது மின்சாரம் தடைபட்டதால் உயிரிழந்தார். சிகிச்சை பாதியிலேயே நின்றதே மகனின் மரணத்திற்கு காரணம் என அவரது தாய் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
"மின்சாரம் போனதும், என் மகன் ரத்தம் பாதியிலேயே கருவிக்குள் சிக்கிக்கொண்டது. ஜெனரேட்டரை இயக்க சொல்லி பணியாளர்களிடம் கெஞ்சினேன்; யாரும் உதவவில்லை. என் மகன் உடனே இறந்துவிட்டான்," என சர்பராஸின் தாய் கூறியுள்ளார்.
வழக்கமாக, மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்பட்டால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும். ஆனால், பிஜ்னோர் மருத்துவமனையின் ஜெனரேட்டரில் டீசல் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒப்பந்த நிறுவனம் டீசல் வழங்காததே சிகிச்சையை தொடர முடியாதற்கு காரணம் என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.
தலைமை வளர்ச்சி அதிகாரி பூர்ணா போரா ஆய்வு செய்தபோது, வேறு ஐந்து நோயாளிகளும் மின்சாரம், விளக்குகள், மின்விசிறிகள் இல்லாமல் அவதிப்படுவதை கண்டறிந்தார்.
"டயாலிசிஸ் கருவியில் அதிக இரத்தம் தேங்க வாய்ப்பில்லை என்றாலும், திடீர் மின் தடை நோயாளிகளின் நிலையை மோசமாக்கும்" என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 2020 முதல் டயாலிசிஸ் பிரிவை இயக்கி வரும் சஞ்சீவனி என்ற தனியார் நிறுவனமே டீசல் வழங்காததற்கு காரணம் என மருத்துவமனை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.