ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சத்து மாத்திரை உள்பட சில மாத்திரைகள், திருப்பூர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இவை 200 கிலோ இருந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள வாய்க்கால் ஒன்றில், 200 கிலோ மாத்திரைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து நடந்த விசாரணையில், அந்த மாத்திரைகள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் சத்து மாத்திரைகள் என்று தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாகவும், இதனை அடுத்து வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் துறை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத்திரை கொட்டப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மாத்திரைகளை காலாவதி ஆகும் வரை வழங்காமல், வாய்க்காலில் கொட்டி இருப்பது மனிதாபிமற்ற செயல் என, இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.