மகாராஷ்டிராவில் சுமார் ஆறு மாதங்களாக நாள் ஒன்றுக்கு ரூ.7,000 செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனா திரிம்பகரவ் பாகவத் என்ற பெண், போலியான ஆதார் அட்டை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி நியமன ஆவணங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்டு, போலியான UPSC பட்டியல் மற்றும் சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சான்றிதழை கல்பனா காண்பித்து வந்துள்ளார். மேலும், மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்துவதாக கூறி டெல்லி, ஜெய்ப்பூருக்கு பயணம் செய்துள்ளார்.
விசாரணையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது காதலர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அவரது சகோதரர் ஆகியோரிடமிருந்து கல்பனாவின் கணக்கிற்கு பெரிய தொகை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவர் ஓர் இளம் ஆப்கான் நபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இவரது வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் உயர்மட்ட அரசியல் தொடர்புகள் குறித்த கூற்றுகள் காரணமாக, இந்த வழக்கில் மோசடி தவிர வேறு ஏதேனும் தீவிர உள்நோக்கம் உள்ளதா என்பதை கண்டறியத் தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் உளவுத்துறை இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.