Publish Date: Tue, 26 Aug 2025 (12:49 IST)
Updated Date: Tue, 26 Aug 2025 (12:55 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் நாளை முதல் இந்த வரி அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன்களுக்கு மட்டும் விலை உயர்வு இல்லை. இதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிலிகான் சிப்களில் இயங்கும் பொருட்களுக்கு வரி விலக்கு அறிவித்திருந்தார். கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, செமிகண்டக்டரில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது. இவற்றுக்கு ஏற்கெனவே உள்ள வரி விதிப்பு மட்டுமே தொடரும் என்பதால், அவற்றின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த வரிச்சலுகை, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஐபோன்களில் 71% அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த அளவு வெறும் 31% ஆக இருந்தது. அண்மையில் ஆப்பிள் வெளியிட்ட வருவாய் அறிக்கையில், அமெரிக்காவில் விற்கப்பட்ட ஐபோன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆப்பிளின் உற்பத்தி உத்தியில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
Mahendran
Publish Date: Tue, 26 Aug 2025 (12:49 IST)
Updated Date: Tue, 26 Aug 2025 (12:55 IST)