Publish Date: Tue, 07 Apr 2020 (13:50 IST)
Updated Date: Tue, 07 Apr 2020 (13:52 IST)
வாட்ஸப் மூலமாக கொரோனா குறித்த போலியான செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. உலக சுகாதார அமைப்பும்,. மத்திய, மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மக்களுக்காக வெளியிட்டு வருகிறது.
ஆனாலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் போலியான செய்திகள் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க வாட்ஸப்பில் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி அதிகம் பகிரப்பட்ட செய்திகள் ஒரே முறையில் 5 பேருக்கு அனுப்பும் வசதி குறைக்கப்பட்டு ஒருவருக்கு மட்டுமே பகிரமுடியும் என மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.