Publish Date: Fri, 27 Mar 2020 (09:36 IST)
Updated Date: Fri, 27 Mar 2020 (09:39 IST)
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் அடைந்துள்ள நிலையில் டேட்டா பயன்பாடு அதிகரித்திருப்பது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு , தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். வீடுகளில் இருந்து பணிபுரிய பெரும்பாலும் அவர்கள் மொபைல் டேட்டாவையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் வீடுகளில் அடைந்துள்ள மற்ற மக்களும் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி பாடல்கள் கேட்டல், படம் பார்த்தல் என பொழுதை போக்கி வருகின்றனர். இதனால் டேட்டா வேகம் வெகுவாக குறைந்து வருவதாக மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து செல்போன் நிறுவன கூட்டமைப்பின் இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறுகையில் ”கடந்த சில வாரங்களில் மொபைல் டேட்டா பயன்பாடு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் டேட்டா வேகம் குறையும். இதனால் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் டேட்டாவை சிக்கனமாக உபயோகப்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.